ஊராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் அதே கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ்
மூணாறு ஊராட்சியில் காங்கிரசை சேர்ந்த தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, அக்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்தனர்.
இவ்வூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. காங்., வசம் உள்ள ஊராட்சியில் கட்சி தாவல் தடை சட்டத்தில் 2 உறுப்பினர்களை தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்ததால் காங்., கூட்டணி 11, இடதுசாரி கூட்டணி 8 என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர். காங்., 3வது வார்டு உறுப்பினர் தீபா 2024 பிப்.15 முதல் தலைவராக பதவி வகித்தார். இந்நிலையில் அவர் மார்ச் 29ல் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். ஆனால், தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி, கட்சி முக்கியஸ்தர்கள் வற்புறுத்தி தன்னை ராஜினாமா செய்ய வைத்ததாக தீபா தேர்தல் கமிஷனில் புகார் அளித்தார். விசாரித்த தேர்தல் கமிஷன் ராஜினாமா கடிதம் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டதாக தெரிய வந்ததால் தீபா தலைவராக தொடரலாம் என உத்தரவிட்டது. ஏப்.24ல் தீபா மீண்டும் தலைவராக பொறுப்பு ஏற்றார்.பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக எண்ணிய காங்., முக்கியஸ்தர்கள் ஊராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தனர். அதன்படி காங்கிரஸ் உறுப்பினர்கள் 10 பேர் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, ஊரக வளர்ச்சித் திட்ட அதிகாரியிடம் நோட்டீஸ் அளித்தனர்.