காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் நீக்கம்; சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
”காலனி என்ற சொல் வசைச்சொல் ஆக மாறி இருப்பதால், அதை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் 7வது முறையாக தி.மு.க., ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களால் மீண்டும் தி.மு.க., ஆட்சி தான் அமையும். கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர்கேட்டால் நிர்வாக கட்டமைப்பு தரை மட்டத்துக்கு போனது.
ஊர்ந்து கொண்டிருந்த நிலைமையை மாற்றி உள்ளோம்.
நம்பர் 1 மாநிலம்
தலை நிமிர்ந்த தமிழகத்தை உருவாக்க மக்கள் தி.மு.க.,வை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினர். இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையை செய்துள்ளோம். இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் தமிழகம். இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் 9.6 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதுவரை தமிழகம் அடையாத பொருளாதார வளர்ச்சி இது.
வருமானம் ரூ.3.58 லட்சம்
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு இன்னும் எல்லாத் துறைகளிலும் தலை நிமிர்ந்து உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதம் தான். தமிழகத்தின் தனிநபர் வருமானம் 3.58 லட்சம். மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களில், 22 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 1.4 சதவீதம் தான்.
மேலே பாம்பு, கீழே நரிகள்
பள்ளியில் இடைநிற்றல் என்பது இல்லை. மருத்துவ படிப்பு மாணவர்கள் அதிகம் உள்ளது தமிழகம் தான். மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர் என இடையே மாட்டி கொண்ட மனிதர் போல், ஒருபக்கம் மத்திய அரசு, மறுபக்கம் கவர்னர், இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என தடைகளை தாண்டி செய்யப்பட்ட சாதனைகள். எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தியில் தமிழகம் முதலிடம். நெல் உற்பத்தியில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
அமைதியான மாநிலம்
அமைதியான மாநிலத்தில் தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். தமிழகம் அமைதியான மாநிலமாக இருப்பதற்கு போலீசார் தான் காரணம். சட்டம் ஒழுங்கில் கல் விழாதா எனத் துடிப்பவர்கள் எண்ணத்தில் மண்தான் விழுந்திருக்கிறது; சாதி, மதக் கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழகத்தில் உள்ளது. வன்முறை செய்ய வேண்டும் என சிலர் நினைத்தாலும் தமிழக மக்கள் முறியடித்துள்ளனர். குற்றச் சம்பவம் நடந்தால் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகம் என்பது மணிப்பூர் அல்ல, காஷ்மீர் அல்ல. இது தமிழகம் மறந்துவிட வேண்டாம்.நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று பிடிவாதமாக இருப்பவன் நான் அல்ல. போலீசார் சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது, ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். குற்றம் நடந்த உடன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை பாராட்டுகிறேன்.
காவலர்கள் தினம்
செப்டம்பர் 6ம் தேதி காவலர்கள் நாளாக கொண்டாடப்படும். ஒவ்வொரு போலீசாரும் 100 சதவீத அர்ப்பணிப்புடன் நடக்க வேண்டும். குற்ற சம்பவங்கள் பூஜ்ஜியமாக இருந்தால் தான் சாதனை. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். காலனி என்ற சொல் வசைச் சொல்லாக மாறியிருப்பதால் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.