பா.ஜ.,வுடன் கூட்டணி சேர இ.பி.எஸ்., இடம் வலியுறுத்தினேன்: அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு நிர்வாகி பேச்சு
‘பா.ஜ.,வோடு கூட்டணி வைக்க வேண்டும் என நானே சொன்னேன்.. முஸ்லீம்கள் நமக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜபார் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ஜபார் பேசியதாவது: நானே இ.பி.எஸ்., இடம் சொன்னேன். நம்ம இந்த தேர்தலில் பா.ஜ., உடன் தான் கூட்டணி வைக்க வேண்டும். முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள்.
முஸ்லிம்கள் வந்து அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள். நான் வந்து கோவையில் பெரிய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர். நான் கண்ணால பார்த்து விட்டேன். கோவையில் வேலுமணி என்று ஒருத்தர் இருக்கிறார். அவர் வந்து முஸ்லிம்களுக்கு நிறைய காரியங்கள் செய்தார். ஆனால் யாரும் ஓட்டு போடவில்லை.
கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், நாம் பாஜ.,வோடு இல்லை. நம்ம கூட ஒரு முஸ்லிம் கட்சி இருந்துச்சு, ஆனால் அந்தக் கட்சியும் சேர்ந்து திமுகவுக்கு ஓட்டு அளித்தது. அதனால் நாம் ஏன் பாஜவை பகைக்க வேண்டும். பாஜ., உடன் கூட்டணி சேர்ந்தால் நமக்கு ஒரு பலம் வரும். ஆள் பலம், அதிகாரம் பலம் வரும். இன்றைக்கு அதிகாரம் பலம் தான் பேசுகிறது. பாஜ., உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னேன். இன்றைக்கு வைத்திருக்கிறார்கள்.
நிச்சயமாக இந்த கூட்டணி வளமான கூட்டணியாக மாறும். வளமான சக்தியாக உருவெடுக்கும். அந்த உருவெடுக்கும் சக்திக்கு நாமெல்லாம் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பதவி பறிப்பு
இதற்கிடையே, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அப்துல் ஜப்பார் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை, அதன் நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.