3.27 லட்சம் மக்கள் தொகை அதிகரிப்பு; துணை இயக்குனர் தகவல்
தேனி மாவட்டத்தில் 23 ஆண்டுகளில் 3.27 லட்சம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என உலக மக்கள் தொகை தின கருத்தரங்கத்தில் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அன்புச்செழியன் பேசினார்.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அன்புச்செழியன் முன்னிலை வகித்தார். இணை இயக்குனர் ரமேஷ்பாபு வரவேற்றார். பொது சுகாதார துறை துணை இயக்குனர் ஜவஹர்லால், சமூக நலத்துறை அலுவலர் சியாமளா தேவி, மருத்துவமனை நிலைய அலுவலர் ராஜேஷ் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். கலெக்டர் பேசுகையில், ” மாவட்டத்தில் 3 மற்றும் 4 குழந்தைகளை பிரசுவித்த பெண்களை கணக்கெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு 33 சதவீத ஆண்கள் கருத்தடை செய்துள்ளனர். இந்த ஆண்டு 100 பேராக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
குடும்ப நலத்துறை துணை இயக்குனர் பேசுகையில், ‘தேனி மாவட்ட மக்கள் தொகை 2001ல், 10.93 லட்சமாகவும், 2011ல் 12.45 லட்சமாகவும், 2024ல் 14.20 லட்சமாக உயர்ந்து வருகிறது. 2001- யை ஒப்பிடும்போது 3.27 லட்சம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. பெண்ணிற்கு ‘கருவளவீதம்’ 2.1 அளவில் இருக்க வேண்டும். அப்போது தான் பிறப்பு, இறப்பு ஒரே நேர்கோட்டில் செல்லும். ஆணிற்கு 25 வயது, பெண்ணிற்கு 20 வயதில் திருமணம் செய்ய வேண்டும்.
ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் மூன்று ஆண்டு இடைவெளி இருக்க வேண்டும். தற்போது நடக்கும் 46 சதவீதம் பிரசவங்களில் இந்த இடைவெளி பின்பற்றவில்லை.
இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் திருமணம் எண்ணிக்கை 23 சதவீதம், இவற்றில் பீஹாரில் அதிகபட்சமாக 40 சதவீதம், தமிழ்நாட்டில் 13 சதவீதம். இவை ‘0’ சதவீதமாக குறைத்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தலாம்’, என்றார்.