‘கிறிஸ்துவர் என்பதால் தான் அப்பாவு சபாநாயகர் ஆனாரா?’
‘தி.மு.க., ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர்கள் போன்ற முக்கிய பதவிகள், மதத்தின் அடிப்படையில் தான் கொடுக்கப்படுகிறதா என்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘எங்கள் சர்ச் ரெக்கார்டை எடுத்து பாருங்கள், எவ்வளவு பேர் ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளனர் என்பது தெரியும்.
அப்பாவு, கிறிஸ்துவராக இருந்ததாலேயே, அவருக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது. இல்லை என்றால், அவர் கோவிலில் மணி அடித்து கொண்டு தான் இருந்திருப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் பொன்னையா பேச்சில் இருப்பது முழுக்க ஹிந்து மத வெறுப்புணர்வு மட்டுமே.
தி.மு.க., ஆட்சியும், ராகுல் ஆதரவும் இருக்கும் தைரியத்தில் ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் இழிவுபடுத்தி பேசியிருக்கிறார்.
கிறிஸ்துவர் என்பதால் தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டரா? தி.மு.க., ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர்கள் போன்ற முக்கிய பதவிகள் மதத்தின் அடிப்படையில் தான் கொடுக்கப்படுகிறதா என்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.
சென்னை அரசு பள்ளியில் பேசிய சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க காட்டிய வேகத்தில், பத்தில் ஒரு பங்கையாவது இரு வேறு மாதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதும் காட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.