மாணவர்களிடம் தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம் : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
மாணவர்களிடம் தன்னம்பிக்கை, விடா முயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என போடி ஏல விவசாய சங்க கல்லூரியின் 50 வது பொன்விழா மலர் வெளியிட்டு விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வெளியிட்டு பேசினார்.
இக்கல்லுாரியில் நேற்று நடந்த பொன்விழா மலர் வெளியீட்டு விழா கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
உபதலைவர் ராமநாதன், செயலாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார், பேராசிரியர் முருகேசன் வரவேற்றனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொன்விழா மலர் வெளியிட்டு பேசியதாவது: பிறருக்கு பணம் கொடுக்க, கொடுக்க குறையும். கல்வி கொடுக்க, கொடுக்க வளரும்.
கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ஏல விவசாயிகளால் கல்லூரி துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சியும் வழங்குவது பாராட்டுக்கு உரியதாகும்.
மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்தின் தூண்களாக அன்பு, அமைதி, ஈகை, மனித நேயத்துடன் செயல்பட வேண்டும்.
சவால்கள் வரும் போது எதிர்த்து போராட வேண்டும். மாணவர்கள் ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கல்வி கற்றால் வாழ்வில் வெற்றி பெறலாம் என பேசினார்.
கல்லூரி நிர்வாக குழுவினர்கள் கமலநாதன், சொரூபன், சிவப்பிரகாசம், ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், நந்தகுமாரன், ஏல விவசாயிகள் சங்க நிர்வாக குழுவினர்கள் ஞானவேல், பிரபு, முருகேசன், ஓம் பிரகாஷ், இமாம்தீன், பிரபாகரன், ஜெகதீஸ்வரன், மாணிக்கவாசகம், செல்வகுமார், நித்தியானந்தன், மகேஸ்வரன், தெய்வ சிகாமணி, ரவி மற்றும் 1982 – 85ம் ஆண்டு வரலாற்று துறை மாணவர்கள் செல்வம், ராஜா. அன்பழகன், ராஜேந்திரன், மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.