Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

குண்டு எறிதலில் தங்கம் வென்ற மாணவருக்கு மாதம் ரூ.6 ஆயிரம்

கம்பம்: மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தடகள போட்டிகளில் குண்டு எறிதலில் தங்கம் வென்ற மாணவருக்கு மாத ஊக்கத் தொகை ரூ.6 ஆயிரம் தேனி மாநில தடகள சங்கம் வழங்கியது.

பள்ளி மாணவர்களை தடகள போட்டிகளில் சாதிக்க துாண்டும் வகையில் ‘மிஷன் ஒலிம்பிக் மெடல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை ரூ.6 ஆயிரம் வீதம் ஓராண்டுக்கு மாநில தடகள சங்கம் வழங்குகிறது. இந் நிதி உதவி பெறும் மாணவர் தகுதியை வளர்த்து கொள்ளவும், ஒலிம்பிக்கில் சாதிக்கவும் நிதியை பயன்படுத்தலாம். அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி சாதித்தால் ஊக்கத்தொகை தொடரும். இத் திட்டத்தில் மாநில அளவில் 7 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளி 10 ம் வகுப்பு மாணவர் ஜஸ்வந் மாநில தடகள போட்டியில் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் குண்டு எறிதலில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இவருக்கு ‘மிஷன் ஒலிம்பிக் மெடல்’ திட்டத்தின் கீழ் மாநில தடகள சங்கம் ரூ.6 ஆயிரத்தை ஊக்கத் தொகை வழங்கியது. நேற்று மாணவருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்ட தடகள செயலர்அஜய் கார்த்திக்ராஜா, உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் ஆகியோர் ஊக்கத் தொகைக்கான காசோலையை மாணவரிடம் வழங்கினார்கள். தலைமையாசிரியை கலாராணி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *