அரசு மேல்நிலைப் பள்ளி நுாற்றாண்டு விழா
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நுாற்றாண்டு விழாவில் திரளாக முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
இப்பள்ளி 1924ல் தனது கல்விச் சேவையை உயர்நிலைப் பள்ளியாக துவங்கியது. இந்த ஊரை சேர்ந்த உயிரிழந்த கருத்தராவுத்தர் இப்பள்ளிக்கான இடத்தை தானமாக வழங்கி, உயர்நிலைப்பள்ளி, கல்லுாரியையும் துவக்கினார். பின் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. கல்லுாரி தாளாளர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். முதல்வர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜாபர் சாதிக் வரவேற்றார். தேனி எம்.பி. தங்கதமிழ்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‘இப்பகுதியில் மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் குழந்தைகளின் கல்விக்கு இந்த உயர்நிலைப் பள்ளி உத்தரவாதம் தந்துள்ளது. இன்றைக்கும் தந்து வருகிறது. இப்பள்ளியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் உதவிகளை தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கண்டிப்பாக செய்து தருவேன்.’, என்றார். நிகழ்வில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், பேரூராட்சித் தலைவர் முகமது அப்துல் காசிம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, முன்னாள் பேராசிரியர் துரைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கடந்தாண்டு பிளஸ் 2, 10ம் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 6 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை ரூ.20 ஆயிரத்தை சென்னை சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் ராஜலட்சுமி,முன்னாள் வங்கி மேலாளர் சண்முகம் ஆகியோர் வழங்கினர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சண்முகம், சீனிவாசன், அட்வகேட் முத்துக் குமரன், சத்தியமூர்த்தி, ஆசிரியர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.