கூடுதல் பஸ்களை இயக்க மேகமலை பகுதிக்கு வலியுறுத்தல்
கம்பம், : மேகமலை பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முன்வர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் மேகமலை முக்கிய சுற்றுலா தலமாகும். இப் பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராசா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பல பகுதிகள் சுற்றுலா பயணிகளை கவர்கிறது. மூணாறுக்கு இணையாக சீதோஷ்ண நிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் கார்களில் வந்து விடுகின்றனர். ஆனால் இம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பஸ் சேவையை எதிர்பார்க்கின்றனர்.
மேகமலை பகுதிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. காலை, மாலை என குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே உள்ளது. தற்போது கார்களில் செல்ல முடியும் என்ற நிலை உள்ளதால், சுற்றுலா செல்ல நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் செல்ல முடியாத நிலை உள்ளது . எனவே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும்.
குறைந்தபட்சம் ஹைவேவிஸ் பேரூராட்சி வரை பஸ்களை கூடுதலாக இயக்க முன்வர வேண்டும். இயக்கும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் மேகமலை பகுதியை கண்டு ரசிக்க வாய்ப்பு ஏற்படும். கம்பம் மற்றும் தேனி அரசு போக்குவரத்துக் கழக மேலாளர்கள் கூடுதல் பஸ்களை இயக்க முன் வர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.