மானிய விலையில் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் : மூலிகை நாற்றுக்கள் வழங்கப்படுமா ஹெர்பல் கார்டன்’ திட்டத்தில்
கம்பம்: ‘தோட்டக்கலைத்துறையின் சார்பில், ‘ஹெர்பல் கார்டன்’ திட்டத்தில் வழங்கப்படும் மூலிகை நாற்றுக்களை விவசாயிகள், பொது மக்கள் பயன் பெறும் வகையில் மானிய விலையில் வழங்க வேண்டும்.’ என, விவசாயிகள் இயற்கை ஆர்வலர்கள் தோட்டக்கலைத்துறையை வலியுறுத்தி உள்ளனர்.
மருத்துவ குணம் கொண்ட துளசி, கற்பூரவல்லி, திருநீற்றுபச்சிலை, பிரண்டை, கீழாநெல்லி உள்ளிட்ட மூலிகைச் செடிகள் ஹெர்பல் கார்டன் திட்டம் மூலம் கடந்தாண்டு தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்பட்டது. மூலிகை செடிகளுடன் ஆடாதொடை, கற்றாழை, வல்லாரை, திப்பிலி, அஸ்வகந்தா என ஒரு தொகுப்பாக 20 மூலிகைச் செடிகள், 10 செடிகள் வளர்க்கும் பைகள், 10 கிலோ மக்கிய தென்னை நார் கழிவு, 4 கிலோ மண்புழ உரம், தொழில் நுட்ப கையேடு வழங்கப்பட்டது. மொத்த விலை ரூ.ஆயிரத்து 500 என்றும், 50 சதவீத மானியம் போக ரூ.750 க்கு கடந்தாண்டு வழங்கப்பட்டது. பொது மக்கள் வீடுகளில் வளர்க்க அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இந்தாண்டு மூலிகைச் செடிகள் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.
தோட்டக்கலைத் துறையினர் கூறுகையில், ‘கடந்தாண்டு மூலிகைச் செடிகள் வழங்கினோம். இந்தாண்டு எலுமிச்சை , நெல்லி, சப்போட்டா, மா, வாழை கன்றுகள் தரும் திட்டம் அறிமுகம் செய்துள்ளோம்.’, என்றனர். மூலிகைச் செடிகள் மருத்துவ குணம் கொண்டது. வீடுகளில் சிறு, சிறு உடல் உபாதைகளை சரி செய்து கொள்ள பயன்படும். எனவே மீண்டும் மூலிகைச் செடிகள் வழங்கும் திட்டத்தை தோட்டக் கலைத்துறை அமல்படுத்த வேண்டும்.’ என, விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.