நா.த., கட்சி பிரமுகர் பெயரில் கடிதம் மூணாறில் கலவரத்தை துாண்டுவோம்
மூணாறு: மூணாறில், ‘கலவரத்தை துாண்டுவோம்.’ என, நாம் தமிழர் கட்சியின் கேரள மாநில பொறுப்பாளர் பெயரில் பலருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மூணாறில் போக்குவரத்து ஆலோசனைக் குழு கூட்டத்தின் முடிவு படி ரோட்டோர கடைகள் அகற்றும் பணி அக்.25ல் துவங்கியது. அதற்கு எதிராக மூணாறை சேர்ந்தவரும், மும்பையில் வசிப்பவருமான நாம் தமிழர் கட்சியின் கேரள மாநில பொறுப்பாளர் சமூக வலைதளங்களில் தனிப்பட்ட நபர்கள் உள்பட பலரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டார். அவர் உள்பட இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்டவர் பெயரில் மூணாறில் தமிழர்களுக்காக, ‘கலவரத்தை துாண்டுவோம்’ என அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கத்தினர் உள்பட பலருக்கு தபால் மூலம் வந்த கடிதம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடிதத்தில், ‘இதற்கு முன் ரோட்டோர கடைகள் அகற்றம் உள்பட பல்வேறு பிரச்னைகளில் தலையிட்டு கலவரத்தை துாண்ட துணிந்தும், நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை.’ என, துவங்கும் அந்த கடிதத்தில் ஒரு கலவரத்தை துாண்டினால் தான் முடிவு ஏற்படும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அழைத்து வந்து மூணாறில் பொது மேடையில் நேரடியாக அனைத்தையும் தெரிவிப்போம்.’, என்ற தகவல் இடம் பெற்றுள்ளன. தவிர தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜா உள்பட பலரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தும் வாசகங்கள் உள்ளன. இந்த கடிதம் குறித்து உளவுத்துறை போலீசார், சிறப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.