என். எஸ் .ஓ. , மண்டல இயக்குநர் விஷ்ணுராஜ் தகவல் : நாட்டின் ஜி.டி.பி. , பண வீக்கத்தை தீர்மானிக்கும் தொழில் துறை தரவுகள்
மதுரை: நாட்டின் ஜி.டி.பி., பணவீக்கம் ஆகியவற்றை தீர்மானிப்பதில் தொழில்துறை குறித்த தரவுகள்முக்கிய பங்கு வகிப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ.,) மதுரை மண்டலஇயக்குநர் விஷ்ணுராஜ் தெரிவித்தார்.
மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் என்.எஸ்.ஓ., மதுரை மண்டலம் சார்பில் தொழில்துறைகள் சார்ந்த ஆண்டு கணக்கெடுப்பிற்கான சுய தொகுப்பு முகாம் மண்டல இயக்குநர் விஷ்ணுராஜ் தலைமையில் நடந்தது.உதவி இயக்குநர் பழனியப்பன் வரவேற்றார்.
ஆண்டு கணக்கெடுப்பின் ரிட்டன் படிவங்களை சுயமாக எவ்வாறு தொகுத்து பூர்த்தி செய்வது என தொழில்துறை பிரதிநிதிகளுக்கு வழிகாட்டப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மூத்த புள்ளியியல் அதிகாரிகள் முருகன், பிரேமா ராணி, ரூப் சிங் குர்ஜார், மணீஷ் குமார், சஞ்சீத் குமார் ஆகியோர்வழிகாட்டினர். துல்லியமான தரவு உள்ளீட்டின் முக்கியத்துவம், தவிர்க்க வேண்டிய விஷயங்களை எடுத்துரைத்து பிரதிநிதிகளின் சந்தேகங்களை தெளிவுபடுத்தினர். பங்கேற்பாளர்கள் ஆன்லைன் சமர்ப்பிப்பு முறைக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இயக்குநர் விஷ்ணுராஜ் பேசியதாவது: தொழில்துறை குறித்த தரவுகள் நாட்டின் ஜி.டி.பி., பணவீக்கம் உள்ளிட்டவைகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இக்கணக்கெடுப்பு உற்பத்தி குறித்த தரவுகளில் கவனம் செலுத்துகிறது. அரசு, தொழில் நிறுவனங்கள், நிதிச்சந்தைகளுக்கு புள்ளியில் துறை குறியீடுகளை வழங்குகிறது.
உற்பத்தி சார்ந்த தொழில்துறை குறியீட்டில் குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம் முதல் 3 இடங்களில் உள்ளன. நாட்டின் தொழில்துறை வரைபடத்தில் தமிழகம் தனி இடத்தைப் பெற்றுள்ளது. பல இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இத்தகைய வளர்ச்சிக்கு சரியான முறையில் பதிவு செய்யப்படும் தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார்.
மூத்த புள்ளியியல் அதிகாரி பத்மாவதி நன்றி கூறினார். தமிழ்நாடு வர்த்தக சங்க துணைத் தலைவர் செல்வம் ஏற்பாடுகளை செய்தார். தலைவர் ஜெகதீசன், புள்ளியியல் துறை துணை இயக்குநர் துரை உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.