Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

நீர் வரத்தால் தொடர்ந்து உயரும் வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிபட்டி; முல்லைப்பெரியாறு அணை நீர்வரத்தால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேவுள்ள வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயருகிறது.

வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வைகை அணைக்கான நீர் வரத்து அதிகரித்தது.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக ஆறு மற்றும் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் டிச.,12ல் நிறுத்தப்பட்டது. பின் டிச.,18ல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக மீண்டும் திறந்து விடப்பட்டது.

வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை, முல்லைப்பெரியாறு அணை நீர் வரத்தால் டிச.,12ல் 49 அடியாக இருந்த நீர்மட்டம் டிச.,14ல் 55.25 அடியாகவும், டிச., 16ல் 60.79 அடியாகவும் உயர்ந்து நேற்று காலை 6:00 மணிக்கு 64.40 அடியாக இருந்தது. அணையின் மொத்த உயரம் 71 அடி.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1621 கன அடியும், மூல வைகை ஆற்றின் வழியாக வினாடிக்கு 170 கன அடியாகவும் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 1430 கன அடியும், குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி நீரும் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

நீர் வெளியேற்றத்தை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகம் இருப்பதால் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *