பெரியாறு அணை நீர்மட்டம் மழையின்றி குறைந்து வருதால் – நீர் திறப்பை குறைக்காததால் விவசாயிகள் தவிப்பு
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழையின்றி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவை குறைக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் புலம்பி தவித்து வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. தற்போது இரண்டாம் போக சாகுபடி நடந்து வருகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு தண்ணீர் தேவை உள்ளது. கடந்த சில நாட்களாக அணை நீர்ப் பிடிப்பில் மழையின்றி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 124.60 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 421 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 3538 மில்லியன் கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1100 கன அடி திறக்கப்படுகிறது.
2024 டிச.13ல் அதிகபட்சமாக பெரியாறில் 101 மி.மீ., தேக்கடியில் 108 மி.மீ., மழை பதிவானது.
இதனால் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 10 அடி வரை உயர்ந்து 130 அடியை எட்டியது. அதன்பின் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முழுமையாக மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருவதால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவை குறைத்து இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாததால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து சாகுபடிக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.