மாடித் தோட்டம் அமைத்த தம்பதிக்கு குவிந்த பாராட்டுகள் தொடர் விழிப்புணர்வால் அமைந்த 155 மாடித் தோட்டங்கள்
பெரியகுளம் நகராட்சி வடகரை வடக்கு பாரஸ்ட் ரோடு சுசீலாராணி. இவர் தனது கணவர் அன்பழகனுடன் இணைந்து குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின் படி வீட்டின் மூன்றாவது மாடி முழுவதும் மாடித்தோட்டம் அமைத்து, ‘நந்தவனம்’ என பெயிரிட்டுள்ளார். இவரின் தோட்டம் பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் புதிதாக மாடித்தோட்டம் அமைப்பவர்கள் பார்வையிடும், ‘முன் மாதிரி மாடித்தோட்டமாக தேர்வு ஆனதால், சுசீலாராணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
சுசீலாராணியின் மாடித் தோட்டத்தில் கத்தரிச்செடி, மாதுளை, வாழை, சப்போட்டா, முருங்கை, மா ஆகியவை நவீன தொழில்நுட்பத்துடன் ‘டிரம்மில்’ பாதியளவு மண்ணில் வளர்க்கப்பட்டு உள்ளன.
இதுதவிர விஷ முறிவு மூலிகையான நாகதாளி, சிறியாநங்கை, துளசி, கற்பூர வெற்றிலை, துாதுவளை, முல்லைப் பூச்செடி, பிச்சிப்பூ, கனகாம்பரம், ஏழு வகையான செம்பருத்தி செடிகள், சிறுநீரக கல்லை கரைக்கும் ரணகள்ளி, சங்குப் பூக்கள், சிவப்பு ஊட்டி ரோஜா, தக்காளிச் செடி, அவரை, திராட்சைச் செடிகள், பந்தலில் தொங்கும் பீர்க்கங்காய் கொடி, சுரக்காய், புதினா பாலக்கீரை, பசலைக் கீரை, எலுமிச்சை, இனிப்பு துளசி உட்பட நுாற்றுக்கும் அதிகமான செடிகள், கொடிகள், மரங்கள் வரிசையாக வளர்க்கப்பட்டுள்ளன.
ஊக்கப்படுத்திய அறிவியல் ஆசிரியர்
சுசீலா ராணி, இல்லத்தரசி: பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கும் போது குடியரசு தினத்தன்று தாவரவியல் ஆசிரியர் தாமரைக்கண்ணன் அனைவருக்கும் விதை பந்து கொடுத்து விதைக்கச் சொன்னார். நாங்கள் நட்ட விதை, காயாக, கனியாக பறிக்கும் போது, மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அன்றில் இருந்து விடுமுறை நாட்களில் தந்தையுடன் தோட்டத்திற்கு செல்வதை வழக்கமாக ஆர்வமாக செய்து வருகிறேன். தற்போது இருபது ஆண்டுகளாக மாடித்தோட்டத்தை பராமரித்து
வருகிறேன். 10 செடிகளுடன் துவங்கினேன். தற்போது நுாற்றுக்கணக்கான செடிகளுக்கு மேல் உள்ளன. தினமும் ஒவ்வொரு செடி, கொடி, மரத்திற்கும் தேவைகளுக்கு ஏற்ப தலா 3 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை நேரம் ஒதுக்கி பராமரிக்கிறேன். மனதிற்கு இதமாக உள்ளது. காய்கறிகள், மூலிகைகள், கீரைகள், பழங்கள் என, தினந்தோறும் சீஷனுக்கு தகுந்த மாதிரி தினமும் 2 முதல் இரண்டரை கிலோ பறித்து உணவாக பயன்படுத்துகிறோம். மீதமுள்ள காய்கறி, கீரைகளை உறவினர்களுக்கு கொடுக்கிறேன். மாடித்தோட்டத்திற்கு செல்லும் போது மன அமைதி, நம்பிக்கை கிடைக்கிறது. தோட்டத்தில் விழுகின்ற இலைகளை காய்கறி கழிவுகளை சாணத்தை பயன்படுத்தி மக்க செய்து இயற்கை உரமாக பயன்படுத்துகிறேன். முட்டை ஓடுகள், முருங்கை இலை பொடி, நகராட்சியில் கொடுக்கும் உரம் ஆகியவற்றை அடி உரமாகவும், மீன் கழிவையும் நாட்டுச் சர்க்கரை கலந்து, ‘மீன் அமிலம்’ தயாரித்து தெளிக்கிறேன். இதனால் செடிகளை பூச்சிகள் அண்டாது., என்றார்.
155 மாடித்தோட்டங்கள்
அசன் முகமது: நகராட்சி சுகாதார ஆய்வாளர், பெரியகுளம்: நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை, வடகரை 30 வார்டுகளில் துாய்மை இந்தியா திட்டம் 7 மேற்பார்வையாளர்கள் மூலம் மாடித்தோட்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நகராட்சி சார்பில் இயற்கை உரம் 5 கிலோ கொடுக்கிறோம். 2021 ல் 50 மாடித்தோட்டம் உருவாக்கினோம். தற்போது 155 ஆக அதிகப்படுத்தியுள்ளோம் என்றார்.