கூடலூர் அருகே சாப்பிடும் போது புரையேறி வாலிபர் சாவு
கூடலூர் ஜன. 29: கூடலூர் அருகே, சாப்பிடும்போது புரையேறி வாலிபர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், கூடலூர் அருகே, நாராயணதேவன்பட்டியில் உள்ள மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி சுமதி. இவர்களது மகன்கள் அஜித்குமார், அஜய் (24).
கடந்த 2 தினங்களுக்கு முன்னர், அஜய் வீட்டில் உணவு சாப்பிட்டபோது திடீரென அவருக்கு புரையேறியது. அவரது குடும்பத்தினர் முதலுதவி செய்தும் சரியாகவில்லை. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அஜயை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அஜயை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்தாக தெரிவித்தனர். இது குறித்து கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.