Thursday, May 8, 2025
மாவட்ட செய்திகள்

மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக இன்று வைகை அணை நீர் திறப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து இன்று மாலை தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.

மதுரையில் நடைபெறும் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 12 ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இதனை முன்னிட்டு வைகை அணை நீர், முன்கூட்டியே மதுரை சென்று சேரும் விதமாக இன்று மாலை 6:00 மணிக்கு திறந்து விடப்பட உள்ளது.

வைகை அணை நீர்வளத் துறையினர் கூறியதாவது:

மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து 216 மில்லியன் கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் ஆற்றின் வழியாக திறக்கப்படும்.

அணையில் இருந்து வெளியேறும் நீர் படிப்படியாக குறைக்கப்பட்டு மே 12 காலை 6:00 மணிக்கு நிறுத்தப்படும். ஆற்றின் வழியாக நீர் செல்வதால் கரையோர பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்றனர்.

நேற்று வைகை அணை நீர்மட்டம் 55.32 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி).

நீர் வரத்து வினாடிக்கு 25 கனஅடி. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி, சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *