சிறுத்தை நடமாட்டம் தொழிலாளர்கள் அச்சம்
மூணாறு : மூணாறில் வன உயிரின காப்பாளர் அலுவலகம் அருகே சிறுத்தையை பார்த்ததால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் புலி, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து அவற்றிடம் சிக்கி பலியாகும் பசுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மூணாறு நகரில் உள்ள வன உயிரின காப்பாளர் அலுவலகம் அருகே நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள் சிறுத்தையை பார்த்தனர். அதனால் அச்சம் அடைந்த தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மூணாறு வனத்துறை அதிகாரி பிஜூ தலைமையில் வனக் காவலர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். நடமாட்டத்தை கண்டு பிடிக்க இயலாத நிலை ஏற்பட்டதால், இன்று சோதனை தொடரும் என வனத்துறை அதிகாரி பிஜூ தெரிவித்தார்.