Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

கெங்குவார்பட்டியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படுமா

தேவதானப்பட்டி: பெரியகுளம் சப்-டிவிஷனில் கெங்குவார்பட்டியில் புதிதாக போலீஸ் ஸ்டேஷனை அமைக்க வேண்டும். இப் பகுதியில் அடிக்கடி நிலவும் அசாதாரண சூழலை உடனே சமாளிக்க உதவும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த போலீஸ் சப் டிவிஷனில் தென்கரை,வடகரை, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் 4 ஸ்டேஷன்கள் உள்ளன. தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கூடுதல் பொறுப்பாக ஜெயமங்கலம் ஸ்டேஷனையும் கவனிக்கிறார். ஜெயமங்கலம் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் மேல்மங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, கோயில்புரம், குள்ளப்புரம், எருமலை நாயக்கன்பட்டி, ஏ.வாடிப்பட்டி, ஏ.வேலாயுதபுரம், ஏ.ரங்கநாதபுரம், ஏ.புதூர், மருகால்பட்டி,

அழகர் நாயக்கன்பட்டி, வேல்நகர் உட்பட 15 உட்கடை கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் 55 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

தேவதானப்பட்டி ஸ்டேஷன் எல்லைகைக்கு உட்பட்ட கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, புஷ்பராணி நகர், மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லை வரையும், கொடைக்கானல் ரோடு காமக்காபட்டி, ஏ.மீனாட்சிபுரம், ஸ்ரீ ராமபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் இப்பகுதியில் ஜாதி மோதல், கோயில் திருவிழாவில் மோதல், கொலை, கொள்ளை, திருட்டு, மணல் திருட்டு, போலீசாருக்கு சவால் விடும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தேவதானப்பட்டி ஸ்டேஷனில் ஆண்டுகக்கு 300 வழக்குகள் பதிவாகிறது. முக்கிய சுற்றுலா தலமான கொடைக்கானல் செல்லும் ரோடு இப்பகுதியில் உள்ளது.

ஓராண்டுக்கு முன் கெங்குவார்பட்டியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க விரிவான அறிக்கையை முந்தைய எஸ். பி., பிரவீன் உமேஷ் டோங்ரே தயார் செய்து, காவல்துறை தலைவர், துறை செயலாளர்களுக்கு அனுப்பினர். இப்பகுதியில் எப்போதும் அசாதாரண சூழ்நிலை நிலவதால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க போலீசார் திணறுகின்றனர்.

புதிய போலீஸ் ஸ்டேஷன் வேண்டும்

ராமர், கவுன்சிலர்,கெங்குவார்பட்டி பேரூராட்சி: ஜி. கல்லுப்பட்டியில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் தேவதானப்பட்டி ஸ்டேஷன் உள்ளது. இப்பகுதியில் பிரச்னை ஏற்பட்டால் போலீசார் வருவதற்குள் பிரச்னை பெரிதாகிறது. பகுதியில் திடீரென ஏற்படும் மறியல், போராட்டங்களால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கெங்குவார்பட்டியை மையப்படுத்தி ஸ்டேஷன் புதிதாக துவங்க வேண்டும். இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. இதனை ஏற்று புதிதாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனை விரைவில் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *