தற்செயல் விடுப்பு போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகங்கள் வழக்கமான அலுவல் பணிகள் பாதிப்பு
தேனி: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பினர் நேற்று போராட்டத்தில் அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றதால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்ததால் கலெக்டர் அலுவலகம் , தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பெரும்பாலான அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதனால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டது. பள்ளிகளில் ஒரு ஆசியரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்புகளை கவனிக்கும் சூழல் நிலவியது.
மாவட்டத்தில் வருவாய், ஊரக வளர்ச்சி, பள்ளிக்கல்வித்துறை, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு, மருத்துவம் உள்ளிட்ட 50 அரசுத்துறைகளில் 14ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 11,229 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் நேற்று 1844 பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.
மேலும் 871 பேர் முறையான விண்ணப்பம் வழங்கி விடுப்பு எடுத்திருந்தனர். பணிக்கு 8517 பேர் வந்திருந்தனர். தற்செயல் விடுப்பு போராட்டத்தில் 16.42 சதவீதம் பேர் பங்கேற்றனர்.