Saturday, June 7, 2025
மாவட்ட செய்திகள்

கண்மாயை சுத்தப்படுத்த களம் இறங்கிய கல்லுாரி சூழல் பாதுகாப்பு மன்றம்

உத்தமபாளையம்; கம்பம் பள்ளத்தாக்கில் மானாவாரி காடுகளில் இருந்த பல சிறிய கண்மாய்கள் காணாமல் போய் விட்டன. ஆற்றுப் பாசன நெல் வயல்களுக்கு பயன்படும் கண்மாய்களும் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகின்றன. அத்துடன் குப்பையை கொட்டுவதும், பாலிதீன் பைகள், மறுசுழற்சி செய்ய முடியாத வாட்டர் கேன்கள் கண்மாய்களுக்குள் வீசி எறியப் படுவது தொடர்வதால் தாமரைக்குளம் கண்மாய் வளம் பாதிக்கப்பட்டு உள்ளது. வாய்க்கால்பட்டி கோகிலாபுரத்தை இக்கண்மாய் இணைக்கிறது. 55 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது. தெற்கு, வடக்கு திசைகளில் ஆக்கிரமித்து தென்னந்தோப்புகள், நெல் வயல்களாக மாறியுள்ளது.

உத்தமபாளையத்தில் நெல் பிரதானமாக சாகுபடியாகிறது. கால்நடைகளும் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. முழுக்க முழுக்க முல்லைப் பெரியாற்று பாசனமாகும். இருப்பிணும் கோடையில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, நிலத்தடி நீர்மட்டத்தை சீராக வைத்திருக்கவும் தாமரைக்குளம் கண்மாய் பயன்படுகிறது. மாசுபட்டு வரும் இந்த கண்மாயை காக்க தற்போது உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லுாரியின் சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு மன்றம் (Eco Club) சுத்தப்படுத்த களம் இறங்கியுள்ளது. கடந்த வாரம் இந்த மன்றத்தின் உறுப்பினர்கள் நுாற்றுக்கணக்கான வாட்டர் கேன்கள், சாக்கு சாக்காக பாலிதீன் பைகளை கண்மாய்களில் இருந்து அகற்றினர். அத்துடன் காலி மது பாட்டில்களும் கண்மாய்களில் இருந்து அகற்றப்பட்டன. ஆகாய தாமரையை உயர் தொழில்நுட்ப நடைமுறைகளை பயன்படுத்தி அகற்ற ஆலோசித்து வருகின்றனர். இப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

கால்நடைகள் தாகம் தீர்க்கும் கண்மாய்

மாஜிதா பேகம், துணைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர், சூழல் பாதுகாப்பு மன்றம், கருத்தராவுத்தர் கல்லுாரி, உத்தமபாளையம்: உத்தமபாளையம் மட்டும் இன்றி வாய்க்கால்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட கிராமங்களும் இக்கண்மாய் நீரால் பயன்படுகின்றன. கண்மாயை குப்பை கிடங்காக மாற்றி வருகின்றனர். போகிற போக்கில் காலி மது பாட்டில்கள், வாட்டர் கேன்கள், பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை கண்மாய்க்குள் வீசி எறியப்படுகின்றன. அவற்றை அகற்றி கண்மாயை சுத்தப்படுத்த எங்கள் கல்லுாரியின் சூழல் மன்றம் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் சுத்தப்படுத்தும் பணிகள் செய்தோம். தொடர்ந்து கண்மாயை துாய்மையாக பராமரிக்க முடிவு செய்துள்ளோம். இக்கண்மாயில் படகு சவாரி விடலாம். இதன் மூலம் வருவாய் கிடைக்கும். அந்த வருவாயை பயன்படுத்தி கண்மாயை பராமரிப்பு செய்யலாம். இதனால் அருகில் உள்ள பல கிராமங்களில் உள்ள கிணறுகளின் நிலந்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு தாகம் தீர்க்க இக்கண்மாய் நீர் பயன்படுகிறது., என்றார்.

மாணவ, மாணவிகள் ஆர்வம்

பிரியா, துணை பேராசிரியர், சூழல் பாதுகாப்பு மன்றம், கருத்தராவுத்தர் கல்லுாரி, உத்தமபாளையம்: தாமரைக்குளம் கண்மாய் துார்வாரும் பணிகள் செய்ய வேண்டும். கண்மாய் பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்றிட வேண்டும். காலி பாட்டில்கள், பாலிதீன் பைகளை வீசாதீர்கள் என்று போர்டு வைக்க வேண்டும்.

முடிந்தால் கரையோரம் வேலி அமைக்கலாம். எங்கள் மன்றம் சார்பில் கடந்த வாரம் கண்மாயை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டோம். மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இனி தொடர்ந்து கண்மாயை சுத்தப்படுத்தவும், விழிப்புணார்வு பிரசாரங்களை முன்னெடுக்கவும் எங்கள் மன்றம் முடிவு செய்துள்ளது. சுற்றுப் புறச் சூழலை மாசுபடாமல் காப்பது, வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் கடமையாகும். பாளையம் பரவு பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு இந்த கண்மாய் பாசன வசதி அளிக்கிறது., என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *