வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா ஆலோசனை திருவிழாவை அறநிலையத்துறை நடத்த முடிவு
தேனி: அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் சித்திரை திருவிழாவை அறநிலைத்துறை நடத்தவும், உபயதாரர்களாக பொதுமக்கள் பங்களிப்பை வழங்கலாம் என அறநிலைத்துறை உதவி கமிஷனர் ஜெயதேவி ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.
அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இது ஹிந்து அறநிலைய துறைக்கு உட்டது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை முதல்தேதி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு சித்திரை திருவிழா தொடர்பாக முதன் முறையாக ஹிந்து அறநிலைத்துறை ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உதவி கமிஷனர் ஜெயதேவி தலைமை வகித்தார். அறநிலைத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன், கோயில் செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தனர்.
உதவி கமிஷனர், ‘இக் கோயில் 1973 முதல் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருவிழாவில் யார்வேண்டுமானாலும் உபதாரர்களாக பங்கேற்கலாம். கமிட்டிகள், குழுக்கள் நடத்த முடியாது. இந்த ஆண்டு ஹிந்து சமய அறநிலையத்துறை தான் திருவிழா நடத்தும். கொடியேற்றம் தொடர்பாக துறை இணை ஆணையரிடம் தெரிவிக்கப்படும். உபயதாரர்களாக பங்கேற்க விரும்புகிறவர்கள் கோயில் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்றார். திருவிழா உபயதாரர்களாக 28 பேர் பதிவு செய்தனர். ஆலோசனை கூட்டத்தில் ஒரு தரப்பினர் கோயிலில் நந்தி சிலை வைக்கவும், திருவிழா காலங்களில் சிலர் வசூலித்தனர் என பேசியதால் இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.