Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் நாளை தேரோட்டம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசி மகத் தேரோட்டம் நாளை (மார்ச் 12 ல்) நடைபெறுகிறது.

இக் கோயில் வரலாற்று சிறப்பு பெற்ற ராகு, கேது கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். ராகுவும், கேதுவும் தனித் தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர்.

ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ராகு காலத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க வெளி மாவட்டங்களில் இருந்து திரளாக பக்தர்கள் வருகின்றனர். இந்த கோயில் தேரோட்டம், ஆண்டுதோறும் மாசி மாதம், மாசி மக தேரோட்டமாக நடைபெறும்.2020க்கு பின் பல்வேறு காரணங்களால், தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தாண்டு நாளை (மார்ச் 12ல்) காலை தேரோட்டம் நடைபெறுகிறது.

மார்ச் முதல் தேதி விக்னேஸ்வர துறை, வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைக்கு அன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.

அனுமந்தன்பட்டி உத்தம நாச்சியம்மன் கோயில், உத்தமபாளையம் பிடாரி அம்மன் கோயில்களில் காப்பு கட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இன்று (மார்ச் 11) திருக்கல்யாணமும், நாளை (மார்ச் 12) காலை தேரோட்டமும் நடைபெறுகிறது. காலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் சுவாமியும், அம்பாளும் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10:00 மணி முதல் 11:00 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது.

தேரோட்டத்தை முன்னிட்டு வீதிகளில் அலங்கார விளக்குகளும், மாவிலை தோரணங்களும் கட்டி நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

தெருக்கள் தோறும் நீர் மோர், அன்னதானம் வழங்கவும் பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

தேரோட்ட ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *