ஊரக வளர்ச்சித் துறையில் 242 பேர் தற்செயல் விடுப்பு
தேனி: மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த தற்செயல் விடுப்பு எடுப்பு போராட்டத்தில் 242 பேர் பங்கேற்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தனி பி.டி.ஓ., நியமிக்க வேண்டும், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர். இதனால் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், கலெக்டர் அலுவல ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் 500 பணியிடங்கள் உளளன. இதில் தற்போது 397 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 242 பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். 25 பேர் அனுமதி பெற்று விடுப்பு எடுத்திருந்தனர். பலர் பணிக்கு வராததால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.