டயர் பஞ்சர் ஆகி பாதியில் நின்ற அரசு பஸ்: பயணிகள் சிரமம்
போடி: போடி மெயின் ரோட்டில் அரசு பஸ் டயர் ‘பஞ்சர் ஆகி பாதியில் நின்றதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.
போடி டெப்போவில் இருந்து கிராம மார்க்கமாக 23 பஸ்களும், பிற மாவட்டங்களுக்கு 46 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த டெப்போவில் அரசு பஸ்கள் முறையாக பராமரிப்பது இல்லை. பயணிகள் செல்லும் பஸ்சின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதும், கழன்று செல்வதும் தொடர்கிறது. சில பஸ்களுக்கு பேட்டரி பழுதால் ஸ்டார்ட் செய்து தள்ளி விட வேண்டிய நிலையில் உள்ளது.
நேற்று காலை போடி அரசு டெப்போவில் இருந்து பெரியகுளத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ் (டி.எண் 57 என். 1973 ) திரும்ப போடி வந்து கொண்டிருந்தது. காலை 12:30 மணிக்கு போடி காமராஜர் பஜார் மெயின் ரோட்டில் வரும் போது பஸ்சின் முன் வலது பக்க டயர் பஞ்சர் ஆனது. டிரைவர் பிரேக் பிடித்ததால் பஸ் ரோட்டின் நடுவே நின்றது பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். மெயின் ரோட்டில் பஸ் நின்றதால் மற்ற வாகனங்கள் செல்ல சிரமமும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. வேறு டயர் மாற்றிய பின் பஸ் எடுத்து செல்லப்பட்டன.
போடி டெப்போவில் இயக்கப்படும் பஸ்சின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆவது தொடர்வதால் பயணிகள், டிரைவர்கள் சிரமம் அடைகின்றனர்.