கோயிலில் கொள்ளை முயற்சி தனிப்படையினர் விசாரணை
மூணாறு : மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
மூணாறு நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 14ல் இரவு 11:30 மணிக்கு ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றான். அப்போது சப்தம் கேட்டுச் சென்ற கோயில் காவலாளி மாடசாமி 60,யை கம்பியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றவன், கோயில் அருகே பூட்டிக் கிடந்த வீட்டிலும் கைவரிசையை காட்டி விட்டு தப்பினான்.
கோயிலில் மூன்று உண்டியல்கள் உடைக்கப்பட்டபோதும் ஒரு உண்டியலில் இருந்து பணம் திருடப்பட்டதாக தெரியவந்தது. ரூ.25 ஆயிரம் வரை திருடு போனதாக கோயில் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவங்களை குறித்து மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் இரண்டு எஸ்.ஐ.க்கள் உள்பட பத்து பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். கோயில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை பரிசோதித்து விசாரணை நடக்கிறது.
இது போன்று 2019ல் கோயிலில் வெள்ளியிலான சேவல், கொடி, செம்பு, சிவன் அங்கி, உண்டியல் பணம் என ரூ.2 லட்சம் மதிப்பில் கொள்ளை போனது. அந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.