விபத்துக்களை தடுக்க டவுன் பஸ்களில் கதவு பொருத்தும் பணி
தேனி:டவுன் பஸ்களில் படிக்கட்டு பயணம் மேற்கொள்வதை தடுக்க நீதிமன்ற உத்தரவில் கதவுகள் பொருத்தும் பணி துவங்கி உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் டவுன் பஸ்களை பயன்படுத்துகின்றனர். குறைவான பஸ்கள் இயக்கம், அதிகமானோர் பயணிப்பதால் இட நெருக்கடி காரணமாக சிலர் படிக்கட்டுகளில் தொங்கியவாறு சாகச பயணம் மேற்கொள்கின்றனர்.
இப்பயணத்தில் விபத்துக்கள் நிகழும் போது பலர் உடல் உறுப்புகளையும், சிலர் உயிரையும் இழக்கின்றனர்.
இதையடுத்து தேனியில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்படும் பழைய டவுன் பஸ்களின் படிக்கட்டுகளில் கதவுகள் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. கதவு திறந்து மூடுவது டிரைவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்துக்களை தடுக்க டவுன் பஸ் படிக்கட்டுகளில் கதவு பொருத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் முதற்கட்டமாக 141 பஸ்களில் கதவு பொருத்தப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து டவுன் பஸ்களிலும் கதவுகள் பொருத்தப்படும்,’ என்றார்.