வன உயிரினங்கள் இருந்தால்தான் வனம் உயிர்ப்புடன் இருக்கும்; மாணவர்களுடன் டி.எப்.ஓ ., கலந்துரையாடல்
கம்பம்; ”வன உயிரினங்கள் இருந்தால்தான் வனம் உயிர்ப்புடன் இருக்கும். இவற்றை பாதுகாப்பது மாணவர்களின் கடமை.” என, மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தெரிவித்தார்.
சின்னமனுார், வெள்ளையம்மாள்புரம், உ.அம்மாபட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை மாவட்ட வனத்துறை ஒரு நாள் சூழல் சுற்றுலா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கம்பம் வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து கலந்துரையாடல் நடத்தினர்.
மாவட்ட வன அலுவலர் சமர்த்தா மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக்கின் உழைப்பு, தியாகம், மனித குல நலனுக்காக ஆற்றிய பணிகள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சீதோஷ்ண நிலை மாற்றம் மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு காரணம் நாம் இயற்கையை பாதுகாக்காமல் இருப்பதுதான். வனத்தை பாதுகாக்க மாணவர்கள் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்.
வன உயிரினங்கள் இருந்தால் தான் வனம் உயிர்ப்புடன் இருக்கும். இரண்டையும் பாதுகாக்க வேண்டும். எதிர்கால வனம், வன உயிரினங்கள் பாதுகாப்பு மாணவர்கள் கைகளில் தான் உள்ளது., என்றார்.
பின் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்து, தெளிவாக விளக்கினார்.
லோயர்கேம்ப் பென்னிகுவிக் மண்டபம், குமுளி அருகில் உள்ள சுரங்கனாறு வனப்பகுதிகளுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு வனத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கப்பட்டது. மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலர் செசில்கில்பர்ட், மயிலாடும் பாறை ரேஞ்சர் செல்வராணி, கம்பம் ரேஞ்சர் ஸ்டாலின், வனத்துறை பணியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.